Archives: பிப்ரவரி 2017

இருளில் ஒரு நமுட்டுச் சிரிப்பு

வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) பத்திரிக்கையில், பீட்டர் தையிலே (Peter Thiele) மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் மனித வாழ்வை காலவரையின்றி நீடிக்கச் செய்யும் முயற்சிகளைக் குறித்து, “தொழில்நுட்ப ஜாம்பவான்களின் சமீபத்திய திட்டப்பணி: மரணத்தை மீறிடு” என்ற தலைப்பில் ஆரியானா சா (Ariana Cha) ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்த திட்டப்பணிக்காக பல கோடிகளைச் செலவழிக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

ஆனால், அவர்கள் சற்று காலதாமதமாக வந்து விட்டனர். ஏனென்றால் மரணம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்,” என்று இயேசு கூறியுள்ளார் (யோவா. 11:25-26). தன் மீது விசுவாசம் வைக்கிற எவனும் ஒருபோதும், எச்சூழ்நிலைமையிலும் சாகவே சாவதில்லை என்று இயேசு உறுதியளிக்கிறார்.

ஆனால் ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது நம்முடைய சரீரங்கள் மரித்துப்போகும். அதைக்குறித்து நாம் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் “நான்” என்று நாம் கூறும் நம்முடைய சுயம், அதாவது சிந்தித்தல், பகுத்தறிதல், நினைவுகூறுதல், நேசித்தல் போன்ற சாகச பகுதி ஒருபோதும் சாகவே சாவதில்லை.

மேலும் இதன் சிறப்பு என்னவெனில், இது நமக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற ஒரு ஈவு. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, இயேசு நமக்களிக்கும் இரட்சிப்பை நாம் பெறுவதே. இவ்வன்பளிப்பைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கும்பொழுது, இவ்வளவு பெரிய காரியத்திற்கு இவ்வளவு எளிமையானதொரு பதிலா என்கிற உணர்வு ஏற்படுகிறது என்று சி. எஸ். லூயிஸ் தெரிவிக்கிறார். ஆகவே அதை “இருட்டில் ஒரு நமுட்டுச்சிரிப்பு” போல என விவரிக்கிறார்.

சிலர் இதைக்குறித்து, “இது மிகவும் எளிமையாக உள்ளதே,” என்கின்றனர். நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், நீங்கள் பிறப்பதற்கு முன்பே தேவன் உங்களை நேசித்து நீங்கள் என்றென்றும் அவரோடே வாழ வேண்டும் என்று அவர் விரும்பும்பொழுது, எதற்காக அவ்வழியை கடினமாக அமைத்திடுவார்?

கண்களால் காண முடியாத மோதிரம்

கிரேக்க தத்துவஞானியாகிய பிளாட்டோ (கி.மு. 427 - கி.மு. 348) மனித இருதயத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட ஓர் கற்பனை வழியை கையாண்டார். பூமியின் ஆழத்திலே நன்கு புதைந்து மறைந்து கிடந்த ஒரு தங்க மோதிரத்தை எதேச்சையாக கண்டுபிடித்த மேய்ப்பனைப் பற்றிய ஒரு கற்பனைக் கதையை கூறினார். ஒரு நாள் ஓர் பயங்கர நிலநடுக்கம் பழங்கால மலைக்கல்லறை ஒன்றை பிளந்து அந்த மோதிரத்தை அம்மேய்ப்பனுக்கு வெளிப்டுத்தியது. அதுமட்டுமன்றி, அந்த மோதிரத்திற்கு மந்திர சக்தி உள்ளதையும் அதை அணிபவர் மற்றவர் கண்களுக்கு தெரியாவண்ணம் மாயமாய் மறைந்து போக முடியும் என்பதையும் எதேச்சையாக அம்மேய்ப்பன் அறிந்துகொண்டான். மாயமாய் மறைந்து போவதைக் குறித்து எண்ணும் பொழுது பிளாட்டோ ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது மனிதர்கள் தாங்கள் பிடிபட்டு, தங்கள் தவறுகளுக்காக தண்டனை அனுபவிக்கக் கூடும் என்கிற கவலை அவர்களுக்கு இல்லாதிருந்தால், தீமை செய்ய அவர்கள் தயங்குவார்களா என்பதே கேள்வி.

யோவான் சுவிசேஷத்திலே இக்கருத்தை இயேசு வேறொரு கோணத்தில் சொல்வதை நாம் காணலாம். நல்ல மேய்ப்பன் என அழைக்கப்படும் இயேசு, தங்களுடைய செயல்கள் வெளியரங்கமாகிவிடாதபடி தங்களுடைய இருதயங்களை இருளின் போர்வைக்குள் மறைத்துக்கொண்டிருப்பவர்களைக் குறித்துப் பேசுகிறார் (யோவா. 3:19-20). தங்களுடைய தவறுகளை மூடி மறைத்து வைக்க நினைப்பதை சுட்டிக்காட்டி நம்மை குற்றப்படுத்த அவர் விரும்பவில்லை, மாறாக அவர் மூலமாக அவர் அளிக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொண்டு, அவரின் வெளிச்சத்திற்குள் நம்மை அழைக்கிறார் (வச. 17). நம்முடைய இருதயங்களின் மேய்ப்பவராகிய அவர் மனுஷ இருதயங்களில் உள்ள மிக மோசமான காரியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதின் மூலம் தேவன் நம்மீது எவ்வளவாய் அன்புகூர்ந்துள்ளார் என்பதையும் வெளிப்படுத்துகிறார் (வச. 16).

தேவன் தம்முடைய இரக்கத்தின் ஐஸ்வரியத்தினாலே இருளில் இருக்கும் நம்மை ஒளியிலே அவரைப் பின்பற்றி நடக்க அழைக்கிறார்.

முழுமையாய் நெருங்கிச் சேருதல்

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு கால்ஃப் (Golf) போட்டியைக் காணும்படி என்னுடைய நண்பர் என்னையும் தன்னோடு அழைத்துச் சென்றார். முதல் முறை என்பதால் அங்கு எதை எதிர்பார்ப்பது என்று கூடத் தெரியவில்லை. அங்கு வந்து சேர்ந்த பொழுது, சில பரிசுப்பொருட்கள், தகவல் அட்டை, கால்ஃப் மைதான வரைபடம் ஆகியவற்றை கொடுத்த பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவ்விளையாட்டின் 18வது நிலையில், முக்கிய பிரமுகர்கள் கண்டுகளிக்கும் கூடாரத்திற்கு அனுமதி கிடைத்தது. அங்கு எங்களுக்கு அமர இருக்கைகளும் இலவச உணவும் கிடைத்தது. நான் தனியாக வந்திருந்தால் இந்தக் கூடாரத்திற்கு வர எனக்கு அனுமதி கிடைத்திருக்காது. ஆனால் இப்பொழுது அது கிட்டியதற்கு காரணம் என் நண்பர். அவர் மூலம் தான் எனக்கு முழுமையான அனுமதி கிட்டியது.

எந்த உதவியுமின்றி நாம் விடப்பட்டிருந்தால், நாம் அனைவரும் பரிதாபத்திற்குரிய நிலையில் தேவனை விட்டு துண்டிக்கப்பட்டே இருந்திருப்போம். ஆனால், நம்முடைய தண்டனையை இயேசு ஏற்றுக்கொண்டதால், அவருடைய ஜீவனையே நமக்களித்து, தாம் தேவனிடம் கிட்டிச்சேர அனுமதி அளித்துள்ளார். “அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும்” (எபே. 3:10) என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியுள்ளார். கிறிஸ்து இயேசுவுக் குள்ளாக யூதனையும், கிரேக்கனையும் ஒன்றாக இணைத்த இந்த ஞானம், நாம் அனைவரும் பிதாவாகிய தேவனை கிட்டிச்சேர வழிவகுத்துள்ளது. “அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது” (வச. 12).

நாம் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும் பொழுது, நம்மோடு ஐக்கியம் கொள்ளப் பிரியப்படும் தேவனிடம், அளவற்ற அன்பு செலுத்தும் தேவனிடம் கிட்டிச்சேர உதவும் ஒப்பற்ற நெருக்கத்தை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்.

முழு இருதயத்தோடு!

காலேப் ‘முழு இருதயத்தோடு’ ஆண்டவரைச் சேவித்த உத்தமமான மனிதன். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை உளவுபார்த்து மோசேவுக்கும் மக்களுக்கும் அறிக்கை அளிக்கும்படி அனுப்பப்பட்ட 12 பேர் கொண்ட குழுவில் காலேபும், யோசுவாவும் இருந்தனர். “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்வோம்” (எண். 13:30) என காலேப் கூறினான். ஆனால் அந்தக் குழுவில் இருந்து 10 பேர் வெற்றிபெற இயலாது என கூறினார்கள். தேவன் அதை அவர்களுக்கு வாக்குப் பண்ணியுள்ளார் என்பதை அறிந்திருந்தும், தடைகளை மாத்திரமே அவர்கள் பார்த்தார்கள் (வச. 31-33).

இந்த 10 பேர் ஜனங்களை நம்பிக்கை இழக்கச்செய்து, தேவனுக்கு எதிராக முறுமுறுக்கச் செய்தார்கள். இதனால் அவர்கள் 40 ஆண்டுகள் வனாந்திரத்திலேயே அலைந்து திரிந்தார்கள். ஆனால் காலேப் தன்னுடைய நம்பிக்கையை இழந்து போகவேயில்லை. “என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் (முழுமனதுடன்) என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” (14:24) என கர்த்தர் கூறினார். 45 ஆண்டுகள் கழித்து, காலேப் 85 வயதாய் இருக்கும்பொழுது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் (முழு இருதயத்தோடு) பின்பற்றினபடியினால்” (யோசு. 14:14) எபிரோன் பட்டணத்தை தனக்கென பெற்றுக்கொண்டான்.

பல நூற்றாண்டுகள் கழித்து, “நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது” என இயேசுவை நோக்கி நியாயப்பிரமாண வல்லுநர் ஒருவர் கேட்ட பொழுது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை” (மத். 22:35-38) என இயேசு பதிலளித்தார்.

இன்றும்கூட, நம் முழு இருதயத்தோடு நாம் செலுத்தும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும், அர்ப்பணிப்பிற்கும் பாத்திரரான தேவன் மீது தான் கொண்ட விசுவாசத்தின் மூலம் காலேப் நமக்கு ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விழித்திருந்து ஜெபியுங்கள்

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளைத் துளைத்து, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம்.

 

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும்.